காத்தான்குடி பிரதேச செயலக 2023 ஆம் ஆண்டிற்கான 5வது பிரதேச தினக் கூட்டமானது (28) திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச தினக் கூட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் மாத்திரம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்க்கப்படுமென பிரதேச செயலாளரால் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இக் கூட்டத்தில் விவசாய போதனாசிரியை அவர்களால் சமுர்த்தியினால் வழங்கப்பட்ட விதைகளை அதிகமான பயனாளிகளினால் சரியான முறையில் நடப்பட்டு பாதுகாக்கப்படவில்லை.அதனால் பயனாளிகள் முழுப் பயனையும் பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
கருத்திட்ட முகாமையாளரினால் அவர்களுக்குரிய பயிற்சிகள் வழங்கப்பட்ட பின் விதைப்பைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வீடுகளிலும் சாப்பாட்டு கடைகளிலும் இருந்து வருகின்ற கழிவுகள் கான்களில் விடப்படுவதாகவும் இதனால் மக்களுக்கு சுகாதாரம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் எமது பிரதேசத்தை பாதுகாப்பது நாம் எல்லோருடைய பொறுப்பு எனவும் நகரசபை அதனை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் நகரசபையினால் வியாபாரப்பதிவுகளை மேற்கொள்ளும் போது மிக முக்கியமாக தேசிய அடையாள அட்டை இலக்கம், தேசிய அடையாள அட்டையில் உள்ள விலாசம், பெயர் என்பவற்றை பரிசீலித்த பின் வியாபாரப் பதிவுகளை வழங்குமாறும், பிரத்தியேக வகுப்புகள் நடைபெறும் இடங்களுக்கான உரிமையாளர்கள் MOH, CRPO ஆகியோரிடமிருந்து அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் தொடர்ந்து SPHI மலசலகூடம், நீர் வசதி, டெங்கு அபாயம், போன்றவைகளை மேற்பார்வையினை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுகளில் பெற்றோர்கள் அதிர்ப்தியடைவதாகவும் வழங்கப்படும் உணவுகள் போசாக்கு நிறைந்ததாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைவதற்கு பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர்களிடம் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் DEO விடம் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
SPHI அவர்களால் டெங்கின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், EDO,SDO, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர், செயலாளர்கள், மற்றும் அவற்றின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக உதவிப் பிரதேச செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.




















