2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி, காத்தான்குடி - 4 (164C) இல் அமைய பெற்றுள்ள ஊரின் மிகவும் பழமையான பாரம்பரிய வரலாற்று மிக்க அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம் செய்து திறந்து வைக்கும் வைபவமானது பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஸிஹானா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வானது தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இறுதியாண்டு சமூகப் பணி மாணவி M.M.Fathima Thikra அவர்களின் "Revitalization of Early Childhood Development Services in GN Division - 164C Kattankudy" எனும் கருத்திட்டத்தின் தொனிப்பொருளில் பிரஜாசக்தி தேசிய வேலை திட்டத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களான முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. றினோஸா லாபிர், மற்றும் கிராம சேவகர், சமுதாய வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் போன்றோர் சகிதம், பிரஜா சக்தி குழுவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் மற்றும் இந்நிகழ்வின் கதாநாயகர்களான பாலர் பாடசாலையின் சிறார்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதானமாக குறித்த பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும் தொடர்ச்சியான பெற்றோர்களின் ஆதரவு மற்றும் சமூகத்தில் உள்ள மக்களின் பங்களிப்பு போன்றன அவசியம் என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வானது சிறப்பாக இடம் பெறுவதற்காக அயராது பாடுபட்ட சமூகப் பணி மாணவி M.M. Fathima Thikra பிரதேச செயலகம் சார்பாக திட்டமிடல் பணிப்பாளர் முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர மற்றும் கிராம உத்தியோகத்தர் போன்றோரினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
குறிப்பாக இந்த பாலர் பாடசாலையின் எழுச்சிக்கு ஒத்துழைப்பையும் நிதி ஆதரவுகளையும் ஊரின் நலன் விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்கள் வழங்கி சிறப்பித்து இருந்தார்கள்.




















