மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் சமூக சேவை திணைக்களமும் இணைந்து நடாத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பயிலுனர் விளையாட்டுப் போட்டியில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற போட்டியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு 25.05.2026 திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ. நஜிமுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத், உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம். சில்மியா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஹன்சுல் சிஹானா மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி எஸ்.எப்.ஆர். பரீட் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் அவர்களது விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவையைப் பாராட்டி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.
இந்நிகழ்விற்கு லயன்ஸ் கழகமும் காத்தான்குடி பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் அனுசரணை வழங்கியிருந்ததுடன், மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் மற்றும் சாதனைகளை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதேச செயலகம் – காத்தான்குடி.























